
கார்ல் மார்க்ஸ் 1853-ம் ஆண்டில், அன்று அமெரிக்காவின் அதிக விற்பனையைக் கொண்டிருந்த செய்திப்பத்திரிகையான ‘நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்’ ஏட்டின் லண்டன் நிருபராகப் பணியாற்றிய போது, இந்தியாவைப் பற்றி எழுதத் தொடங்கினார்। ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி,’ ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்’ என்ற, பிற்காலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு கட்டுரைகளில், இந்தியாவின் பழைய சமுதாய முறையையும் பொருளாதாரத்தையும் பிரிட்டிஷ் ஆட்சி எப்படி மூர்க்கமாகச் சீரழித்தது என்பது பற்றியும் அதனால் எப்படி இந்திய மக்கள் சொல்லொனாத் துயரங்ககளுக்கு உள்ளானார்கள் என்பதையும் விவரித்துள்ளார்।அதே நேரத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நோக்கம் அதுவல்ல என்ற போதிலும் இந்தியாவில் ஒரு புத்தாக்கத்துக்குத் தேவையான அடிப்படை நிலைமைகளை அவர்களது காலனியாதிக்க ஆட்சி இங்கே உருவாக்கிக் கொண்டிருந்தது என்றும் மார்க்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார்। அவர் தமது இரண்டாவது கட்டுரையில், ‘‘ஆங்கிலேய நுகத்தடியை வீசியெறியக் கூடிய அளவுக்கு இந்தியர்கள் பலம் பெறுவார்கள்,’’ என்று எழுதினார்। ‘‘பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அணிதிரட்டப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்ட உள்நாட்டுப்படையினர் இந்திய மக்களின் விடுதலை எழுச்சிக்கு ஒரு முன்னோடி அறிகுறியாகத் திகழுவார்கள்,’’ என்றும் அவர் எழுதினார்। எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்னுரைப்பவர் போல அவர் எழுதியது அடுத்த நான்கு ஆண்டுகளில் மெய்யானது।
No comments:
Post a Comment