இது காந்தியக்குணம் இல்லை மேடம்
மேதாபட்கர்! த।நீதிராஜன்
சர்வாதிகாரி இட்லர் நடத்திய சித்திரவதை முகாம் போல மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் பகுதி இருக்கிறதாம் ।நர்மதா அணைத்தடுப்பு இயக்கத்தலைவர் மேதாபட்கர் கூவியிருக்கிறா
ஆணாதிக்க கொடுமைகள் நிறைந்த இந்திய சமூகத்தில் ஒரு போராளியாக அவர் வலம் வருவதை பார்த்து பெருமிதம் கொள்ளும் கம்யூனிஸ்ட் தோழர்களை பார்த்துத்தான் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
மேற்கு வங்க அரசை எதிர்த்து ஆளுநரிடம் புகார்மனு அளித்துவிட்டார்.மத்திய அரசு தலையிட வேண்டும் என அறிக்கை விட்டுவிட்டார்.தேசிய மனித உரிமை கமிஷனுக்கு போவாராம்.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை நந்திகிராமத்திற்கு வரவழைப்பாராம்.இந்திய நாட்டின் மனச்சாட்சியை தட்டி எழுப்பப்போகிறாராம்.நவம்பர் 14அன்று கல்கத்தாவில் பேரணி நடத்தப்போகிறாராம்.
எல்லாம் எதற்காக? சில மாதங்களாக அமைதியாக இருந்த மேதாபட்கருக்கு நந்திகிராமம் மக்கள் மீது என்ன திடீர் என்று ஆவேச அன்பு?
சில தினங்களுக்கு முன்பாக அரசு நிர்வாகத்துக்கும், திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற பூமிபாதுகாப்புக்குழவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி, வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சரூபாய் உதவி, தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை, காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை பரிசீலிப்பது, பாதிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் அவரவர் இருப்பிடங்களுக்கு கொண்டு சேர்ப்பது, தகர்க்கப்பட்ட பாலங்களை சீரமைத்து மீண்டும் சகஜ நிலையை கொண்டுவருவது என்று இருதரப்பும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
8.11.2007 அன்று மாவட்ட நீதிபதி பி.என்.அகர்வால், பூமி பாதுகாப்புக்குழு தலைவரும், திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏயும் ஆன சுபேந்து அதிகாரி இடையே சந்திப்பு நடந்தது. மக்களின் ஆதரவை இழந்துவரும் திரிணமுல் கட்சியினர் இந்த உடன்பாட்டின் மூலம் தங்களை காப்பாற்றிக் கொள்ள வழி கிடைத்துவிட்டதாக திருப்தியடைந்து விட்டனர்.
இந்த உடன்பாட்டை அமலாக்குவதற்கு மாநில அரசு செய்யும் நடவடிக்கைகளின் விளைவாக நந்திகிராமம் பகுதி மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. பூமி பாதுகாப்புக்குழு என்ற போர்வையிலும், மாவோயிஸ்டுகள் என்ற போர்வையிலும் ஆயுதம் ஏந்திக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் தனிமைப்பட்டு வருகின்றனர்.
இதைத்தான் மேதாபட்கர் மனிதஉரிமை மீறல் என்கிறார் போலத் தெரிகிறது. சுமார் ஒரு வருடமாக நந்திகிராமம் பகுதி இந்த ஆயுதம் தாங்கிய வன்முறையாளர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இவர்களால் பாதிக்கப்பட்ட சிபிஎம்முக்கு ஆதரவான ஏழைமக்கள் நந்திகிராமத்தின் எல்லையோரங்களில் சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக உள்ளனர். அவர்களின் வீடு, உடமைகள் தொழில் அழிந்துவிட்டது. குழந்தைகள் படிப்பு வீணாகிவிட்டது. எப்போது நிவாரண முகாம் மீது தாக்குதல் நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களுக்கும் துன்பம் உண்டு. சும்மா ஒரு மனித நாகரிகத்துக்காகவாது அவர்களுக்கு ஆதரவாக மேதாபட்கர் குரல் கொடுத்தது கிடையாது. திரிணமுல் காங்கிரசு ஆகட்டும், சிபிஎம் ஆகட்டும், மாவோயிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்பவர்களாகட்டும் யாராயிருந்தாலும் வன்முறையால் மக்களை வாட்டாதீர்கள் என்று தவறு எப்பக்கம் இருந்தாலும் கண்டிப்பேன் என்ற நிலை மேதாபட்கருக்கு இல்லை.
ஆயிரக்கணக்ககான ஏழைமக்கள் துன்பப்படும்போது வராத மனித உரிமை ஞாபகம், ஒரு சில வன்முறை தீவிரவாதிகள் பாதிக்கப்படும்போது வருவதன் மர்மம் என்ன?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோதிபாசு “ நந்திகிராம வன்முறை சம்பவங்களால் சிபிஎம் ஆதரவாளர்களும், திரிணமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மீண்டும் பழைய அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தி தரவேண்டும்” என்று பேசுகிறார். கம்யூனிஸ்ட்டுகளை பகைவராக கருதுபவர்களுக்கும் மனிதாபிமான உதவிகளை செய்ய நீள்கிறது தோழர் ஜோதிபாசுவின் கை.
ஆனால் மக்களின் துயரத்தை தீர்க்கவே, அவதாரம் எடுத்து வந்ததைப் போல நடந்து கொள்ளும் மேதாபட்கரின் கண்களுக்கு நந்திகிராமத்தின் எல்லையோரங்களில் நிவாரண முகாம்களில் தவிக்கும் துன்பங்கள் மட்டும் தெரியவே மாட்டேன் என்கிறதே ஏன்?
ஆர்எஸ்எஸ் பாசிஸ்ட்டும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திரமோடி சிறுபான்மை மக்களை படுகொலை செய்வதில் நேரடியாக தலையிட்டிருந்தான் என்று மீடியாக்கள் சமீபத்தில் அம்பலபடுத்தினவே. குஜராத் மக்கள் பக்கமெல்லாம் மேதாபட்கரின் மனிதாபிமானம் திரும்பமாட்டேன் என்கிறதே ஏன்?
உண்மையை தெய்வம் என்றவர் காந்தியடிகள். காந்திய வழிமுறைகளை மேற்கொள்வது போல காட்டிக்கொள்ளும் மேதாபட்கருக்கு ஏன் உண்மையைக் காண மறுக்கும் நிலை?
மக்களின் துன்பத்தைக் காணமால் இருப்பதும், தனக்கு வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் ஐயோ ஐயோ என்று கூவுவதும், காந்திய குணம் அல்ல. அது பாசிச குணம், மேடம் மேதாபட்கர்!
Tuesday, November 13, 2007
Tuesday, September 18, 2007
Monday, September 17, 2007
Saturday, September 15, 2007
Subscribe to:
Posts (Atom)